Thursday, October 25, 2012

THE FRAGRANCE OF MADURAI


அன்பர்களே,

சிலநாட்களுக்கு முன்னர் 'உத்தம புத்திரன்' என்ற பெயரில் ஒரு படம் வந்தது.
ஏற்கனவே இதே பெயரில் இரண்டு படங்கள் வந்தன. ஒன்றில் பியூ சின்னப்பா; இன்னொன்றில் சிவாஜி.
இதை கதை உல்ட்டாப் பண்ணப்பட்டு, இம்சை மன்னன் 23-ஆம் புலிகேசியாக வந்தது.
ஆனால் அந்தப் புதுப் படம் முற்றிலும் வேறு கதையைக் கொண்டது.

இதில் ஒரு பாட்டு வருகிறது.....
"மதுரெ மல்லிஹெ மொட்டு...." என்று வரும்.

இப்போதெல்லாம் மதுரையை 'மதுரெ' என்றோ 'மதுர' என்றோதான் சொல்லவேண்டும். அதுதான் புதுப்பழக்கம். சினிமாவில் அப்படித்தானே வருகிறது?
மதுரை மல்லிகைக்கு அப்படியொரு மகத்துவம்.
மதுரையே மல்லிகை மணத்தால் நிரம்பியிருக்குமாம்.

ஆனால் பழங்காலத்தில் மல்லிகை மணம் மட்டுமல்ல, பலவித
நறுமணங்களும் கலந்து மதுரையை நிரப்புமாம்.
தூரத்தில் வரும்போதே இந்த நறுமணக் கலவையை முகர்ந்தே
மதுரையைச் சமீபித்துவிட்டதைப் பிரயாணிகள் தெரிந்து கொள்வார்களாம்.

என்னென்ன நறுமணமெல்லாம் மதுரையில் இருந்தது என்பதை
சிலப்பதிகாரப் பாடல் கூறுகிறது. திருவிளையாடல் புராணத்திலும் தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் காணலாம்.

சிலப்பதிகாரப்பாடலைப் பார்ப்போமே.......

காழகிற் சாந்தம் கமழ்பூங்குங்குமம்
நாவிக்குழம்பு நலங்கொள் தேய்வை
மான்மதச்சாந்தம் மணங்கமழ் தெய்வத்
தேமென் கொழுஞ் சேறாடி ஆங்குத்
தாது சேர் கழுநீர் சண்பகக் கோதையொடு
மாதவி மல்லிகை மனைவளர் முல்லை
போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி
அட்டிற் புகையும் அகலங் காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்
மைந்தரும் மகளிரும் மாடத்தெடுத்த
அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்
பல்தேறு பூம்புகை அளைஇ
மதுரை தென்றல் வந்தது காணீர்
நன்சேய்த் தன்றவன் திருவலிமூதூர்

சிலம்பு - 115-133/13

அகில், குங்குமப்பூ, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி,  சந்தனம் போன்றவற்றின் சாந்துக் கலவைகளின் வாசம்;
மதுரையில் உள்ள வீடுகளில் உள்ள சமையற்கட்டுகளிலிருந்து வரும் தாளிதம் போன்ற சமையல் மணமும் அடுப்புகளிலிருந்து வரும் புகையின் மணமும்;
அங்காடிக் கடைகளில் சுடப்படும் பலகாரங்களின் மணமும் புகையின் மணமும்;
ஆண்களும் பெண்களும் நீராடிவிட்டு, தம்முடைய கூந்தலை உலர்த்திக் கொள்வதற்காக போட்டுக்கொள்ளும் அகில் புகையின் மணமும்;
மதுரையிலுள்ள தோட்டம் துரவுகளில் மலர்ந்த மல்லிகை, மாதவி, செண்பகம், கழுநீர் முதலிய மலர்களின் நறுமணமும்;
ஆகிய இவையனைத்தும் மதுரையிலிருந்து வீசும் தென்றலில் கலந்து வரும்.

இந்த நறுமணக்கலவைதான் மதுரையை அடையாளம் காட்டி விடுமாம்.

அன்புடன்

ஜெயபாரதி

Thursday, October 11, 2012

CATCH A CAT


   
பூனை பிடிப்பது எப்படி?


      1988 என்று நினைக்கிறேன்...... கெடா மாநிலத்திலுள்ள பாலிங் என்னும் ஊரிலுள்ள முருகன் கோயிலில் சொற்பொழிவாற்ற அழைத்தார்கள்.
      ஆனால் சொற்பொழிவுக்குத் தலைப்பை, கோயிலாளர்களும்
கொடுக்கவில்லை; நானும் ஏதும் தயார்செய்துகொண்டு செல்லவில்லை.
      கோயிலில் சொற்பொழிவை ஆர்ம்பிக்கப்போகும்போது, எதைப் பற்றி பேசவேண்டும் என்று கேட்டேன். அவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. முழிமுழியென்று முழித்தபின்னர், 'எதுனாச்சும் பேசுங்க டாக்டர். ஒங்க இஷ்டம்', என்று சொல்லிவிட்டார்கள்.
      முழிமுழியென்று முழிப்பது இப்போது என்னுடைய முறையாகி
விட்டது. 
      அந்தச் சமயம் பார்த்து பூனை ஒன்று, கூட்டத்திற்குள் நுழைந்து
சென்றது. ருத்திராட்சப் பூனை அல்ல. ஏதோ ஒரு சராசரி கோயில் பூனைதான்.      
      யாரோ ஒருவர், 'பூனையப் புடிச்சு அந்தாண்டை வுடுங்க', என்றார்.
இன்னொருவர் எழுந்து பூனையைப்பிடிக்க முயன்றார். ஆனால் அதுவோ
டேக்கா கொடுத்துவிட்டு இன்னொருபக்கம் போய்விட்டது.
      "பூனையப் பிடிக்கிறதுக்குக்கூட டெக்னிக் தெரிஞ்சிருக்கணும்", என்று 
விளையாட்டாகச் சொன்னேன்.
      அப்போதுதான் மின்னல்போல் தோன்றியது.
      இன்ஸ்பிரேஷன் என்று சொல்வார்களே, அதுதான்.
      'இப்போது நான் 'பூனையைப் பிடிப்பது எப்படி?' என்பதையே
தலைப்பாக வைத்துப்பேசுகிறேன்', என்று ஆரம்பித்தேன். கூட்டத்தினர்
குழம்பிப்போய் பார்த்தனர். விளையாட்டாகச் சொல்கிறேனா, என்ன என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்றும் சொல்ல வில்லை. சொல்வதற்கு அந்தக்காலத்தில் யாருக்குத்தான் தைரியம் இருந்தது?:-)
      ஒன்றரை மணி நேரம் பேசினேன். 'மார்ஜாரக்கிசோர நியாயம்,
மர்க்கடக் கிசோர நியாயம்', எனப்படும் சரணாகதித் தத்துவங்களின் விளக்கமாக அந்த சொற்பொழிவு அமைந்தது. அந்த சொற்பொழிவில் வைணவம்தான் முக்கியத்தளம் என்றாலும், ஏசுநாதரும் தலையைக் காட்டிப்போனார். சரணாகதித் தத்துவத்தை மிக அழகாகவும், தெளிவாகவும், நறுக்குத்தெறித்தார்ப்போலவும் சொன்னவரல்லவா
அவர். 
      நடுவில் யானை பிடிப்பதைப்பற்றியும் ஒரு கொசிறு செய்தியைப்
போட்டுவைத்தேன். கெடாKedah மாநிலமல்லவா! ஆகவே ஒரு சிறிய 
சிலேடையில் புகுந்துவிளையாட வாய்ப்புக்கிடைத்தது. யானைப் பிடிக்கும் 'கெடா(Kedda) முறையைபற்றி சொல்லிவைத்தேன்:-) அந்தக் காலங்களில் சொற்சிலம்பம் ஆடுவதென்றால் மிகவும் பிடிக்கும்:-)
      சொற்பொழிவின் கடைசியில் பூனைக்கும் குரங்குக்கும் இடையே 
போட்டி வைத்தேன்.
      வாக்களிப்பில் பூனையே வென்றது.
      அதாவது மார்ஜாரக் கிசோர நியாயமே கூட்டத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$