Monday, July 8, 2013

காசு, பணம் துட்டு....



காசு 
முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியர் காசு 
இதை ஆனை அச்சு என்றும் அழைத்தார்கள்
கிபி 1251 - 1293



பணம்

ஆங்கிலேயர் ஆட்சியில் புழங்கிய ஒரு பணம் என்னும் அரைக்கால் ரூபாய்


துட்டு

ஆங்கிலேயர் ஆட்சியில் புழங்கிய முக்கால் துட்டு, அரைத் துட்டு, 
கால் துட்டு நாணயங்கள்.
முக்கால் துட்டு என்பது காலணா
கால் துட்டு என்பது தம்பிடி அல்லது சல்லி

கீழே இவற்றிற்கான விளக்கம் கொண்ட அகத்தியர் குழு மடல்!

"காசு, பணம், துட்டு, Money, Money......"
இவற்றில் காசு, பணம், துட்டு ஆகியவை இப்போது பணம் என்ற பொருளைப் பொதுவாகக் குறிக்கும் சொல்லாக இருக்கின்றன. 
ஆனால் இவை மூன்றுமே வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் நாட்டில் 
வழங்கிய, குறிப்பிட்ட மதிப்புக்கொண்ட currency நாணயங்களாக இருந்தவை. 
இவற்றில் 'காசு' என்பது மிகவும் பழைமையானது. ஒரு கால கட்டத்தில் இது பொன்னால் ஆகிய நாணயமாக விளங்கியது. 
பாண்டியர்கள் காலத்தில் ஒரு பொற்காசுவுக்கு 12000 வெற்றிலைகள் 
வாங்கலாம்.
பிற்காலத்தில் காசு என்பது ஒரு செப்பு நாணயமாக விளங்கியது. அப்போது அதன் மதிப்பும் குறைந்துவிட்டது. 
"காக்காசுப் பெறாத விஷயம்" என்ற சொல்வழக்குக்கு இடம் கொடுத்தது. 
கால்க்காசு என்பது மிகச் சிறிய நாணயமாக விளங்கியது.
'பணம்' என்பது பழங்காலத்தில் ஒரு பொன் நாணயமாக இருந்தது. 
பிற்காலத்தில் வெள்ளி நாணயமாக விளங்கியது. 
இது ஒரு வெள்ளி ரூபாயில் எட்டில் ஒரு பங்காக இருந்தது. 
'அணா' நாணயக் கணக்கு புழக்கத்துக்கு வந்தபோது ஒரு சிறிய வெள்ளிக்காசாக விளங்கியது. அது இரண்டு அணா மதிப்புப் பெற்றதாக இருந்தது. அரைக்கால் ரூபாய் என்றும் சொல்வார்கள்.
சிறிய வெள்ளி நாணயம். 
இதற்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. 
சம்பந்தப்புரம், மாமன் மச்சான் முறை கொண்டவர்களைத் திருமணத்துக்கு அழைக்கும்போது ஒரு தாம்பாளத்தில் வெள்ளிப் பணத்துடன் வெற்றிலை பாக்கு வைத்து பத்திரிக்கை வைத்து மரியாதையாக அழைப்புக்கொடுப்பார்கள்.
இதைப் 'பணம் பாக்கு வைத்தல்' என்பார்கள்.
இதை வாங்கியவர்கள் கட்டாயமாக திருமணத்துக்குச் சென்று ஒரு மஞ்சள் துணியில் அதே வெள்ளிப் பணத்தை வைத்து முடிச்சுப்போட்டு அதை மாப்பிள்ளை அல்லது பெண்ணின் மணிக்கட்டில் கட்டி விடுவார்கள். 
இதைக் 'கங்காணம் கட்டுதல்' என்பார்கள்.
இதிலெல்லாம் அந்தக் காலத்தில் ஏதாவது சச்சரவு வந்தது உண்டு.
'துட்டு' என்பது முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் புழங்க ஆரம்பித்து ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் ஆட்சியின் ஆரம்பகாலம் வரைக்கும் இருந்தது.
அப்போது ரூபாய், அணா, பைசா என்னும் கரென்ஸி இந்தியாவின் அதிகாரபூர்வமான கரென்ஸியாக விளங்கியது. 
அந்த வரிசையில் 'துட்டு' என்பதும் கொஞ்ச காலம் இருந்தது. 
ஓர் அணாவில் மூன்றில் ஒரு பங்கு. அந்த நாணய வரிசையில் மிகச் சிறிய மதிப்புக் கொண்டதாக ஒரு சல்லி, அல்லது தம்பிடி விளங்கியது. பன்னிரண்டு தம்பிடி கொண்டது ஓர் அணா. 192 சல்லி/தம்பிடி கொண்டது ஒரு ரூபாய். ஒரு துட்டுக்கு நான்கு சல்லி. 
காலணாவுக்கு மூன்று சல்லி. காலணா என்பது முக்கால் துட்டுக்குச் சமம். 
ஆகவே காலணாவை 'முக்காத் துட்டு' என்றே பெரும்பாலும் குறிப்பிட்டார்கள்.
"காத்துட்டுக்குப் பிரயோசனமில்லை", "தம்பிடிக்கு ஆகாத வேலை", 
"சல்லித்தனம்", "சல்லிப்பயல்" என்ற சொல்வழக்குகள் எல்லாம் 
இருந்திருக்கின்றன.


                                   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



No comments:

Post a Comment